Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Tuesday, April 22, 2014

நீயா நானாவில் சாதாரணமானவள்


ஆமாங்க...
ஒருநாள் நீயா நானா பார்த்துக்கிட்டு இருக்கும்போது வழக்கம் போல 'நீயா நானாவில் கலந்து கொள்ள' அப்படின்னு போன் நம்பர் போட்டிருந்தாங்க. இத்தன வாய் பேசறோமே இங்க போய்  பேச மாட்டோமா அப்படின்னு போன் பண்ணிட்டேன். பிஸியாவே இருந்த போனில் ரொம்ப நேரம் கழிச்சு  லைன் கிடைச்சுது. 'உங்க பேரு, வயசு, என்ன பண்றீங்க, போன் நம்பர் இதெல்லாம் இந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்புங்க' அப்படின்னு சொல்லிட்டு வைச்சுட்டாங்க. நானும் அனுப்பினேன். ரொம்ப நாளைக்கு ஒண்ணும் தொடர்பு இல்லை. நானும் அவங்க மறுபடி போன் நம்பர் போட்டப்ப ரெண்டு மூணு தடவை இதே மாதிரி போன் பண்ணி அனுப்பினேன்.

திடீர்னு ஒருநாள் 'நாங்க விஜய் டிவியில இருந்து பேசறோம். நீயா நானால கலந்துக்க அப்ளை பண்ணி இருந்தீங்க இல்ல, உங்க டீடெயிலை ஒரு போட்டோவோட  மெயில் பண்ணிடுங்க.' அப்படின்னு போன் பண்ணிட்டாங்க. நானும் துள்ளி குதிச்சுகிட்டு,  இருக்கறதுலயே நல்ல டீசன்டான போட்டோவ அனுப்பி காத்துட்டு இருந்தேன். மறுபடியும் ரொம்ப நாளைக்கு ஒண்ணும் தொடர்பு இல்லை.நானும் விடறதா இல்ல. கலந்துக்க அப்ளை பண்ணிட்டே இருந்தேன்.

ஒருநாள் 'தம்பதிகள் கலந்து கொள்ள' ன்னு வந்துச்சு. டிவி முன்னாடி மொபைலும் கையுமா இருந்த என்னை எங்க வீட்டுக்காரர் அட ஹவுஸ் ஓனர் இல்லைங்க... என் புருஷரு (மரியாதை... மரியாதை...)பார்த்துட்டாரு.  'ஏய்... என்ன பண்ணிட்டு இருக்க... இதுல கலந்துக்க போறியா? நானெல்லாம் வரமாட்டேன். என்னை எல்லாம் கூப்பிடாத' அப்படியா இப்படியான்னு ஒரே பந்தா. அவரு கொஞ்சம் கூச்ச சுபாவம். எனக்கு நேர் எதிர். இதிலெல்லாம் கலந்துக்க நினைச்சு கூட பார்க்க மாட்டார். அதுக்காக நான் வேற ஆளையா  செட் பண்ணி கூட்டிட்டு போக முடியும்? சரி... இவரு அதுக்கு சரிபட்டு வர மாட்டார். அதனால் இந்த டாபிக்-க்கு நாம சரிபட்டு வரமாட்டோம் ன்னு விட்டுட்டேன். இருந்தாலும் வழக்கம் போல அப்ளை பண்ணிட்டே இருந்தேன்.


போன ஞாயித்துகிழமை ஒரு போன் வந்துச்சு. 'நாங்க விஜய் டிவி ல இருந்து பேசறோம். நீயா நானால கலந்துக்க அப்ளை பண்ணி இருந்தீங்க'ன்னு பழைய டயலாகே... சரி வழக்கம் போலதான் ன்னு நானும் பதில் சொல்லிட்டு இருந்தேன். பொசுக்குனு 'அரசியலை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்கன்னு ' ஒரு கேள்வி. 'ஆஹா... இது வழக்கமான கேள்வி இல்லையேன்னு' ரெடி ஆகிட்டேன். அது சம்பந்தமான கேள்விகளுக்கு என் பதில்கள் ரொம்ப சுமாராவே இருந்துச்சு. அதனால அவங்களே இன்னொரு தலைப்பு இருக்கு மேடம். அதுல ட்ரை பண்ணுங்கன்னு சாய்ஸ் குடுத்தாங்க.

"திருமணத்துக்கு பின் மகளும் அப்பாவும் " ன்னு ஒரு தலைப்பு. இதுக்கு என்னால சுலபமா பேச முடிஞ்சுது. 'ஓகே மேடம் நீங்க செலக்ட் ஆகிட்டீங்க. புதன் கிழமை (9.4.2014) வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு உங்க அப்பாவோட வந்திடுங்க.' அப்படீன்னு சொன்னதும் எனக்கு சந்தோஷத்துல ஒரு நடுக்கம் வந்துச்சு பாருங்க... செம பீலிங்....

அப்பா கிட்ட 'இப்ப தான் ஆபரேஷன் பண்ணி இருக்கே? நீங்க வரமுடியுமாப்பா' ன்னு கேட்டேன். வீட்லயே சும்மா இருந்து ரொம்ப கஷ்டமா இருந்ததால அப்பா வர ரெடின்னு சொல்லிட்டார். உடனேயே டிரெயின் டிக்கெட் எல்லாம் சௌகரியமா புக் பண்ணி ரெடியா இருந்தோம். அப்பறம் 3 நாளா தினமும் சாயந்திரம் 4 மணிக்கு மேல போன் பண்ணி 'நிச்சயமா வந்துடுவீங்களா ? ப்ரோக்ராம் ல கலந்துக்க முழு வெள்ளை, முழு கருப்பு தவிர எந்த கலர்ல வேணா டிரஸ் போட்டுட்டு வாங்க.' அப்படின்னு விவரங்கள் கேட்டுகிட்டும்  குடுத்துகிட்டும்  இருந்தாங்க. நானும் என் பங்குக்கு 'விடிய விடிய ஷூட்டிங் நடக்குமாமே? 2, 3 மணி ஆகுமாமே' ன்னு கேள்விபட்ட விவரங்கள கேட்டேன். 'அப்படி எல்லாம் இல்லைங்க மேடம். பத்து மணிக்கெல்லாம் முடிஞ்சுடும்' ன்னு சொன்னாங்க.

செவ்வாய் கிழமை நைட்டே கிளம்பிட்டோம். ரூம்ல தங்கி இருந்துட்டு, புதன்கிழமை ஏவிஎம் ஸ்டுடியோக்கு போயிட்டோம். சென்ட்ரல் ஜெயில்ன்னு ஒரு செட் இருக்குமே... அதுக்கு பக்கத்து செட். நாங்க நுழையும்போதே காலைல இருந்து அந்த இன்னொரு தலைப்புக்கு (அரசியல்) ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. நாங்க அமைதியா எதிர்ல உக்காந்து பார்த்துகிட்டு இருந்தோம். விளக்கு போட்ட பிறகு தான் தெரிஞ்சுது அது ஒல்லி பெல்லி செட்ன்னு. எதிர் எதிர் செட் போட்டிருந்தாங்க. ஒரு நாலரை மணி சுமாருக்கு முதல் டாபிக் முடிஞ்சுது. கொஞ்ச நேரத்துல எங்களை ஒவ்வொருத்தர் பேரை சொல்லி கூப்பிட்டாங்க.

அப்பா உட்காரும் இடத்துக்கு நேர் எதிர்ல பொண்ணுங்க உக்காரணும். அப்பாவுக்கு உடம்பு சரி இல்லையே, மேல ஏற முடியாதே, கீழேயே உட்காந்துக்க்கலாம்னு நான் உக்கார்ந்துட்டு பார்க்கறேன் எங்க அப்பா மூணாவது வரிசைல போய் சாவதானமா உக்காந்துகிட்டார். (சரி சரி... உண்மைய சொல்லிடறேன்... அட கீழ உட்கார்ந்தா நாம கொஞ்சம் பளிச்சுன்னு தெரிவோமேன்னு நினைச்ச என் ஆசைல மண் அள்ளி போட்டுட்டு முகத்தை திருப்பிகிட்டார் மகராசன். )அவரை கீழ வந்து உக்காருங்கன்னு சொல்றேன், கண்டுக்காத மாதிரி திரும்பிகிட்டார். இங்கதான் உக்காரணும்னு இருக்கு போல இருக்குன்னு நானும் கடுப்பாவே உக்கார்ந்திருந்தேன்.

திடீர்னு தான் ஞாபகம் வந்துச்சு. அட, நமக்கெல்லாம் மேக்கப் பண்ணி விடுவாங்களா? நாங்களே பண்ணிக்கணுமான்னு கேள்வி வந்துச்சு. 'மேக்கப் பண்ணாம கேமரா முன்னாடியா ? ஓ  மை காட்' ன்னு ஓடிப்போய் அங்க இருந்த ஸ்டுடியோ  ஆளுங்ககிட்ட கேட்டேன். அவங்க 'நீங்களே தான் பண்ணிக்கணும்.' ன்னு சொல்லிடாங்க. ஓடி போய்  வாஷ்  ரூம்ல முகம் கழுவி குத்துமதிப்பா பொட்டு வெச்சுகிட்டு, தெரிஞ்சும் தெரியாம கொஞ்சமா  லிப்ஸ்டிக் போட்டுக்கிட்டு வெளில வந்தா, 'இன்னும் என்ன இங்க இருக்கீங்க. அங்க எல்லாரும் உங்களுக்காக தான் வெயிட் பண்றாங்க'ன்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க. அவசர அவசரமா போனதுல பவுடர் கூட அடிக்க முடியல. உண்மையா சொல்றேன்... பொண்ணுங்களை மேக்கப் பண்ணிக்க விடாம ப்ரோக்ராம் தொடங்குனதுக்கு 'நீயா நானா' டீம்க்கு கடுமையான கண்டனத்தை இந்த பதிவு மூலமா முன் வைக்கறேன்... (எங்க வயித்தெரிச்சல் உங்கள சும்மாவே விடாது சொல்லிட்டேன்...)

அவங்கவங்க இடத்துல உக்காந்த பிறகு, சும்மா கை தட்ட சொல்லி வீடியோ எடுத்தாங்க.ஒரு கால் மணி நேரத்துக்கு சிரிச்ச முகத்தோட இருக்க சொல்லி தனிப்பட்ட வீடியோ  எடுத்தாங்க. அதுக்கப்பறம் சுமார் 6 மணிக்கு நம்ம தானை தலைவர் கோபிநாத் வந்தார். அவரு மட்டும் முழு மேக்கப் ல இருந்தாரா.... செம கடுப்பாயிடுச்சு. இருந்தாலும் கேமரா முன்னாடி நம்ம கடுப்பை காமிக்க முடியாதே... அதனால அடக்கி வாசிச்சுகிட்டேன்.

வந்ததும் எல்லாருக்கும் கை எடுத்து கும்பிட்டு வணக்கம் சொல்லி, சாப்பிட்டீங்களா ன்னு விசாரிச்சுட்டு அதுக்கப்பறம் தான் நிகழ்ச்சியை தொடங்கினார். நம்பவே முடியல, ரீடேக் எல்லாம் எடுக்காமலேயே நிகழ்ச்சி நாலரை மணி நேரம் கழிச்சு பத்தரைக்கு முடிஞ்சுது. இடையிடையே ரெண்டு பிரேக் . டீயும் கேக்கும் முறுக்கும் கொடுத்தாங்க.

சுமார் 20 கேள்வி கேட்டிருப்பார். நான் ஒரு பத்து கேள்விக்கு பதில் சொல்லி இருப்பேன். அப்பா ஒரு ரெண்டு கேள்விக்கு பதில் சொல்லி இருப்பார். தேவை இல்லாம மைக் வாங்கி பேசல. தேவையானப்ப மைக் கிடைக்கல. மைக் கிடைச்சப்ப கேள்விய மாத்திட்டாங்க. எல்லா கூத்தும் நடந்துச்சு. ஆனா நல்லா இருந்துச்சு.

ஏனோ தெரியல, ப்ரேக் விட்டப்ப கூட யாரும் கோபிநாத் கிட்ட பேசல. அவரும் யார்கிட்டயும் பெர்சனலா பேசல. எனக்கு டைரக்டர் ஆண்டனி பத்தி நினைச்சாதான் ஆச்சரியமா இருந்துச்சு. அந்த ஒளி வெள்ளத்துல இருந்து விலகி, இருட்டுல உக்காந்துகிட்டு, இந்த நிகழ்ச்சியை கவனிச்சு, கோபிநாத் மூலமா தனக்கு வேணும்ங்கற பதிலை எங்க கிட்ட இருந்து வாங்க வெச்சு, அதை ஒருங்கிணைச்சு.... Amazing Man ....

அதே போல் கோபிநாத்தும்.. ஒரு பொண்ணு சொன்னாங்க, 'கோபி ஒண்ணுமே இல்ல. ஆண்டனி  தான் எல்லாமே சொல்லி குடுக்கறார்'ன்னு. ஆனா அது உண்மை இல்லை. ஒரு தனி ஆளா, கேமரா மேலயும் கவனமா இருந்து, எங்களையும் சமாளிச்சு, ஆண்டனியின் கேள்விகளுக்கும் பதில் வர வெச்சு, தன சுய கருத்துகளையும் சரியான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தி, ஹப்பா.... Multi tasking ன்னா இதுதான்...

அரசியல் டாபிக் போன வாரம் ஒளிபரப்பினதால அனேகமா இந்த வாரம் ஞாயித்துகிழமை நைட் 9 மணிக்கு விஜய் டிவி ல நாங்க கலந்துகிட்ட டாபிக் ஒளிபரப்பப் படலாம். இந்த வீடியோ யூட்யுப் ல போட்டா, அதோட லிங்க குடுக்கறேன். மறக்காம பாருங்க.

என்னது? என் அடையாளமா? ஒரு வெள்ளையும் சிவப்பும் கலந்த கலர்ல சுடிதார் போட்டுக்கிட்டு மேல இருந்து 2வது வரிசைல இடமிருந்து நாலாவதா, முக்காடு போட்ட பொண்ணுக்கு வலது பக்கத்துல ஒரு அப்பாவி பொண்ணு உட்கார்ந்துட்டு இருப்பா. அவதான் ரொம்ப ரொம்ப 'சாதாரணமானவள் '.

Link இதோ : http://www.youtube.com/watch?v=Zm3VOyBsSF0
ஏற்கனவே சொன்ன மாதிரி ரொம்ப எதிர்பார்க்காதீங்க. முதல் கொஞ்ச நேரம் தான் பேசுவேன்.