Thirukkural

45வது திருக்குறள் என்ன சொல்லுதுன்னா...

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.

அதாவது குடும்பத்துக்குகிட்ட அன்பு காட்டணும் . மத்தவங்க கிட்ட உதவி செய்யறதுங்கற அறத்தை காட்டணும் . அதுதான் இல்வாழ்க்கைக்கான பண்பு. இல்வாழ்க்கை ன்னு ஒண்ணு வாழ்றதுக்கான பயன்.

Thursday, March 31, 2011

நான் திருச்சி போனேனே... பார்ட் 3

கொஞ்சம் Work busy. அதனால சரியான இடைவெளியில் பதிவிட முடியவில்லை.மன்னிக்கவும். இரண்டு வாரங்களுக்கும் மேலானதால் குறிப்பிட நினைத்த சில இடங்களின் பெயர்கள் கொஞ்சம் மறந்துவிட்டது. இன்னும் தாமதித்தால் பார்ட் 3 போட முடியாது என்பதாலும், இதை நம்பி சேர்ந்த ஐந்து பாலோயர்கள் ஏமாந்து போவார்கள் என்பதாலும்  அவசர அவசரமாக இந்த பதிவு.  Let's continue.

அரங்கனின் வெளிபிரகாரத்தில் நாயக்க மன்னனின் ஓவியமும் சிறு விவரமும் காணப்பட்டது. ஒருமுறை மன்னன் வருவதற்குள்ளாக இறைவனுக்கு செய்யவேண்டிய பூஜை முடிந்து விட்டதாகவும், மன்னன் மீண்டும் பூஜை செய்ய சொன்ன போது 'ஒரு வருடம் கழித்துதான் செய்வோம். இடையில் செய்ய மாட்டோம். அதுவரை காத்திருங்கள்'  என்று அர்ச்சகர்கள் சொல்லிவிட (ஹ்ம்ம்ம் .... அந்த காலத்துல எப்படி தைரியமா இருந்திருக்காங்க.), 'அந்த பூஜையை பார்க்கும் வரை நான் அரண்மனை செல்ல மாட்டேன் இங்கேயே தங்கி அரசாங்க அலுவலை கவனிப்பேன்' என்று மன்னனும் அந்த மண்டபத்தையே தன் ஆபிஸ் ஆக்கிக்கொண்டு ஒருவருடம் கழித்து குறிப்பிட்ட பூஜையை கண்ட பின் இடத்தை காலி செய்திருக்கிறான். அர்ச்சகர்கள், மன்னன் இருவரின் ஈகோ யுத்தத்தில் அரங்கனின் அமைதி கெட்டிருக்குமோ இல்லையோ மக்கள் நிம்மதியாக சாமி கும்பிட்டிருக்க முடியாது என்று தோன்றியது. 

அங்கிருந்து வெளியே வந்து தாயாரை தரிசிக்கலாம் என்று செல்லும்போது, மதியம் மணி ஒண்ணேகால்.  நடை சார்த்தப் போவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. வேக வேகமாக சென்றாலும், தாயார் சந்நிதியின் நடை சார்த்தப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அடடா.. இவ்வளவு தூரம் வந்து ரங்கநாயகியை காண முடியவில்லையே என்று ஏமாற்றமாக இருந்தது. சரி அப்படியே வெளியில் இருந்தே எல்லாரையும் கும்பிட்டு விட்டு ஊரை பார்த்து போகலாம் என்று திரும்பினால், 'இப்ப வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம்? உக்காரு . 3 மணிக்கு நடை திறந்துடுவாங்களாம். பார்த்துட்டு போகலாம்' என்று என் அம்மா அங்கேயே படுத்துக்கொண்டார். என் life time ல நான் இப்படி கோவில்ல எல்லாம் படுத்ததே இல்ல. அம்மா,... எழுந்திரும்மா... மானத்த வாங்காத ன்னு கெஞ்சி கூத்தாடியும் ஒரு பிரயோஜனமும் இல்ல. கூட்டமும் குறைவாக இருந்தது. காலை மூணரை மணிக்கு எழுந்த அலுப்பும் சோர்வும் கண்ணை இழுத்தது. வேறு வழி இன்றி நானும்...... (எல்லாரும் தெரிஞ்சுகோங்க. ஸ்ரீ ரங்கத்தில் மதியம் 1 -3 கோவில் நடை சார்த்திடுவாங்க. அதுக்கு ஏத்த மாதிரி உங்கள் டூர் பிளான் இருக்கட்டும்)

செம தூக்கம். ரெண்டு ஐம்பதுக்கு  எழுந்து பக்கத்தில் இருந்த பைப்பில் முகம், கை கால்  கழுவி refresh செய்து கொண்டு ரங்கநாயகியை தரிசிக்க தயாரானோம். ரங்கனின் அழகுக்கு கொஞ்சமும் குறைவில்லை அவர் நாயகி. திருப்தியுடன் தரிசித்து வெளியே வர, 5, 6 கிளிகள் கீச்சிட்டுகொண்டு பறந்தன. இறை சந்நிதியில் கிளி காண்பது நல்ல சகுனம் ஆகையால் இன்னும் பரம திருப்தி கிட்டியது. தல விருட்சம் இருக்கும் இடத்தில் ஸ்ரீ லக்ஷ்மி அஷ்டோத்தரம் என்று நினைக்கிறேன்.( தவறாக இருந்தால் மன்னிக்கவும்.) சமஸ்க்ருத மந்திரத்தை தமிழில் கல்வெட்டாக எழுதி இருக்கிறார்கள். அதை படித்தால் நம் பொருளாதார கஷ்டங்கள் நீங்கும் என்பதால் ஒரு சராசரி பக்தையாக அதை படித்து விட்டு வந்தேன்.( Hey... It really works...பதிவு போட முடியாத அளவு பிஸி ஆகிட்டேன்ல ) படிக்க கொஞ்சம் கஷ்டமாக இருக்கலாம். ஹிந்தி தெரிந்தால் படிப்பது கொஞ்சம் எளிது. 

அங்கிருந்து வெளியே வந்தால் கண்ணன் உரலில் கட்டப்பட்டுள்ள சந்நிதியின் எதிரே, தரையில் வரிசையாக மூன்று குழிகளும், நடு குழியின் மேலே ஒன்று, கீழே ஒன்றுமாக கிட்டத்தட்ட (not exactly) நட்சத்திரம் போல ஐந்து குழிகள் இருந்தன. அதன் பக்கத்தில் கால் வைத்து நிற்க ஒரு சதுர தகடு. அவ்வழியே சென்ற ஐயரிடம் விசாரித்த போது, 'சொர்க்க வாசல் திறப்பு அன்று அந்த தகட்டில் நின்று, இடது கையை முதுகின் பின் வைத்துக்கொண்டு, காலை மடக்காமல் குனிந்து, மோதிர விரலை நடு குழியிலும், சுண்டு விரலை வலது பக்க குழியிலும், ஆள்காட்டி விரலை இடது பக்க குழியிலும், நடு விரலை மேல் குழியிலும், பெருவிரலை கீழ் குழியிலும் பொருத்தி வலது பக்கம் ஒருமுறை, இடது பக்கம் ஒருமுறை பார்த்துவிட்டு பின் நேரே நோக்கினால், சொர்க்க வாசல் தெரியும். அதை வழிபட்டுக்கொள்ள வேண்டும்' என்றார். வித்யாசமாக இருந்தது. 

அங்கிருந்து வெளியே வந்தால், கோவில் தெப்பக்குளம். பசுமையாக இருந்தது. 'வாவ்' என்றேன். 'இவ்ளோ பாசி படர்ந்திருக்கு, என்ன வாவ் வேண்டி கிடக்குது' என்றார் அம்மா. எனக்கென்னவோ கோதண்டராமன் சந்நிதியில் இருந்து பார்க்கும்போது  அந்த பச்சை நீரும், நீல வானமும் கலந்த காட்சி அவ்வளவு அழகாக தோன்றியது. மனசுக்குள்ள அந்த குளுமை வந்து ஒட்டிகிச்சு. அங்கே என்னால் பார்க்கமுடியாதது ஆண்டாளின் திருக்கோலத்தை. நாலாபக்கமும் ஒவ்வொரு முகம் தெரியும் என்று போர்டில் எழுதி இருந்தது. ஆனால், சன்னதி திறக்கப்படவே இல்லை. So sad!

அதன் பின் ஆயிரம்கால் மண்டபமும், அற்புதமான சிற்பவேலை செய்யப்பட்ட மண்டபமும். நுண்ணிய வேலைப்பாடுகள். ரசித்துப் பார்த்தால் அதி அற்புதம் . 
அங்கிருந்து நேரே ராமானுஜர் சந்நிதிக்கு பாதை அழைத்துச்சென்றது. நம்பமாட்டீர்கள். ராமானுஜரின் ஒரிஜினல் உடல் அங்கே அமர்ந்த நிலையில் கிட்டத்தட்ட 800 ஆண்டுகளை கடந்தும் உள்ளது. தன் வாழ்நாள் முடிந்த பின் சமாதிநிலை அடைந்த ராமானுஜரின் உடல் குறிப்பிட்ட காலத்திற்கு பின் மண்ணில் இருந்து மேலே வந்து விட்டது. அன்றிலிருந்து இன்று வரை தண்ணொளி குன்றாமல் உடையார் காட்சி தருகிறார். பச்சை கற்பூரம், குங்குமப்பூ இன்னும் சிலவற்றை கலந்து அவரது உடலை பதப்படுத்தி வைத்துள்ளனர். நகம் கூட ஒரிஜினல். அர்ச்சகர் ஒவ்வொருமுறையும் முழு விவரத்தையும் கூறி தீபாராதனை காட்டுகிறார். 
அங்கிருந்து வெளியே வர, அருங்காட்சியகம் தென்பட்டது. உள்ளே சுற்றி பார்க்க ஐந்து ரூபாய் கட்டணம்.  என் வாழ்நாளில் நான் முதல் முறையாக வாட்கள், (சினிமாவில் மட்டுமே பார்த்த) கவசங்கள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், பெரிய பெரிய தந்தங்கள், என பல விஷயங்கள் இருந்தன. பழங்கால பொருட்களுடன் எதற்கு தற்கால பாசி, செயின்களை  வைத்துள்ளனர் என்று தெரியவில்லை. அங்கே என்னை குழப்பிய ஒரு விஷயம், ஆணும் பெண்ணும் கட்டியனைத்த நிலையில் தந்த வேலைப்பாடால் ஆனா பல பொருட்கள் உள்ளன. அந்த ஆணும் பெண்ணும் யார்னு கேட்டா, நாயக்க மன்னனும் அவன் மனைவிகளுமாம். ஒரு ராஜா, தான் தன் மனைவியுடன் இருக்கும் ஏகாந்த நிலையை எதற்கு இப்படி வெளிப்படையாக exhibit செய்தார் என்று புரியல. 
அதன் பின் சக்கரத்தாழ்வார் சந்நிதி சென்று அவரையும், அவருக்கு நேர் பின்னால் உள்ள யோகநரசிம்மரையும் கும்பிட்டோம். அங்கிருந்து வெளியே வந்து மற்ற சந்நிதிகளையும் தரிசித்து கோவிலை விட்டு திருப்தியாக வெளியே வந்தோம். இந்த கோவிலில் தரிசனம் தவிர்த்த நிறை என்று சொன்னால், நாம் என்ன சந்தேகம் கேட்டாலும் அர்ச்சகர்கள் அதை முகம் சுளிக்காமல் விளக்குவது. குறை என்று சொன்னால், அவர்கள் எல்லோரிடமும் காசு கேட்பது. நாம் கொடுக்க விரும்பினால் கொடுக்கலாம். நம் இஷ்டம் தான் என்றாலும் எல்லோரும் கேட்பதால் நச்சரிப்பதாக தோன்றி விடுகிறது.  மற்றபடிபெரிதாக ஒன்றும் குற்றமில்லை.

கோவிலின் வெளியே எப்போதும் போல பத்து ரூபாய் பாசியை நூறு ரூபாய் என்று சொல்லி ஒரு வெளிநாட்டு பெண்மணியை ஏமாற்றி ஐந்து பாசியை கொடுத்து ஐநூறு ரூபாய்கள் சம்பாதித்திருந்தனர் நம் மக்கள். 'இலவச' செருப்பு விடும் இடத்தில் ரெண்டு ரூபாய் கொடுத்து எங்கள் செருப்பை போட்டுக்கொண்டு நாங்களும் வாலண்டீராக ஏமாந்து வெளியே வந்தோம்.


Friday, March 18, 2011

நான் திருச்சி போனேனே... பார்ட் 2

               அப்புறம் உறையூர் பஸ் ஸ்டாப்பிலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து ஸ்ரீரங்கத்துக்கு போனோம். திருச்சி முழுக்க நிறைய மேம்பாலங்கள் இருந்ததால் ரோட்டில் இருந்து எல்லா வீடுகளும் பள்ளத்திலேயே இருப்பது போல் தோன்றியது. சில இடங்களில், பஸ்ஸில் இருந்து பார்த்தால் first floor அப்படியே தெரிந்தது. சரி, இது இந்த ஊர் ஸ்டைல் போல இருக்கு...

                 ஸ்ரீரங்கம் வந்து இறங்கியதும் ரங்கநாதரை நினைப்பதற்கு முன் ரங்கராஜனை நினைத்துக்கொண்டேன். அதாங்க ... நம்ம சுஜாதா சார். ஸ்ரீரங்கத்தை நமக்கு விதவிதமாக அறிமுகப்படுத்தியது அவர்தானே... எது ரங்கு கடையாக இருந்திருக்கும், எது 'மல்லிப்பூ ஐயர்' வீடாக இருந்திருக்கும் என மனதிற்குள் கேள்வி கேட்டுக்கொண்டே வந்த நான், ராஜகோபுரத்தை கண்டதும், விக்கித்து நின்றேன். இதற்கு முன் நிற்கும் ஒருவன், 'இந்த உலகத்தில் நான் தான் பெரியவன்' என்ற மாயையில் விழ முடியுமா என்று தோன்றியது... நாம் எவ்வளவு சிறிய விஷயம் என்று தோன்றியது. இந்த கோபுரம் முதலில் ராஜகோபுரம் இல்லாமலும், 1877 க்கு பிறகோ என்னவோ தான் ராஜகோபுரம் கட்டப்பட்டதாக தெரிந்துகொண்டேன். பிரம்மாண்டம் !  நேர்ல பக்கத்துல பார்க்கும்போது தான் அது தெரியும்.
அதன் பின் இரண்டுமூன்று கோபுரங்களை தாண்டியபின் தான் கோவிலை வந்தடைய முடிந்தது. அதாவது கோவிலுக்கு உள்ளேயும் ஊர் உள்ளது. வழியெங்கும் கடைகள். அவற்றையெல்லாம் தாண்டி உள்ளே நுழைந்ததும் ஒரு திருப்தி படர ஆரம்பித்தது. தலைவர பாக்கப்போறோம் அப்படிங்கற எண்ணமே ஒருவித நெகிழ்ச்சிய கொடுத்தது. 'கைகால் கழுவ மட்டும்'னு குறிப்பிட்டிருந்த இடத்துல சாப்பிட்ட பாத்திரத்த கழுவிகிட்டு இருந்த அக்காவ நகர சொல்லி கைகால் கழுவிட்டு கோவிலுக்குள்ள நுழைஞ்சோம். மதியான நேரம் ஆகிட்டதால பொடி சுட ஆரம்பிச்சுடுச்சு. வேகமா உள்ள ஓடி க்யூவில நின்னோம்.
                   நானும் பாக்கறேன்... ஒவ்வொரு கோவில்லயும்... க்யூவில நிக்கற நேரத்துல என்னதான் அரட்டை அடிப்பாங்களோ... அந்த நேரத்துல கூடவா சாமிய நினைக்க முடியாது? 'ஓம் நமோ நாராயணாய' ன்னோ, ஏதாவது சாமி பாட்டோ, அட்லீஸ்ட் அங்க இருக்கற சுவர்ல எழுதி இருக்கும் பாடல்களை படிக்க முயற்சியாவது செய்யலாமே. அப்படியும் இல்லாட்டி, எனக்கு இது வேணும் அது வேணும்கற லிஸ்ட் கூட போடலாம் இல்லையா. அந்த க்யூவில நிக்கற நேரம் நமக்கும் சாமிக்குமானது. அதை உபயோகப்படுத்திக்கணும். ஏதாவது ஒரு விதத்துல கருவறைல இருக்கும் சக்திகூட நாம தொடர்பு படுத்திக்கணும். அது பெரும்பாலான மக்களுக்கு தெரிவதே இல்லை. மனுஷன் குறிப்பா தமிழன் பேசியே கெடறான். முக்கியமான இடத்துல பேசாம கெடறான். Leave it.

           ரங்கநாதர் காலடியில காவேரி ஆறு பாயும் னு கேள்விபட்டிருந்தேன். அவர பார்க்கும்போது அந்த இடத்தையும் பார்க்க ட்ரை பண்ணினேன். ப்ச். முடியல. of course தெரியல. வெக்காளியம்மன் அம்மன் கோவில் வெளிச்சமான வெளிச்சம். இங்க அதுக்கு நேர்மாறாக இருந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரும், ஈரோடு கஸ்தூரி ரங்கநாதரும் தான் பள்ளிகொண்ட நிலையில இருப்பாங்க. ஈரோட்ல கொஞ்சம் வெளிச்சம் இருக்கும். இங்க இருட்டு. இறைவனை தேடிதான் நாம அடையணும்ங்கற தத்துவத்துல அமைச்சிருப்பாங்க போல.  பண்ற குறும்பெல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத மாதிரி அழகா, புன்னகையோட படுத்திருந்தார் ரங்கர். வழக்கம்போல கண்ணீர் மல்க இறைவனை தரிசிச்சு, வேண்டிட்டு வெளியே வந்தா, அங்க ஆரம்பிச்சாங்க கலெக்ஷன...  பெரும்பாலான ஐயர்கள் கேட்டு கேட்டு வாங்கறாங்க. எங்க கிட்ட கேக்கறதுக்கு பதிலா ரங்கநாதர்கிட்டயே  கேட்டிருந்தா அவரே கொடுத்திருப்பாரேனு தோணுச்சு. போன பதிவுல போட்ட கதை மாதிரி. 


வெளியே வந்தா, இந்த இடத்துலதான் ராமானுஜர் மாதிரியான பெரிய பெரிய ஜீயர்கள் நடந்து போயிருப்பாங்க. இந்த இடத்த ஆண்ட ராஜாக்கள் இந்த வழியாதான் உள்ள போயிருப்பாங்க. இந்த அழகான சிற்பத்தை செதுக்கிட்டு இருந்த சிற்பிகள் தினம் தினம் ரங்கநாதர தரிசிச்சிருப்பாங்க அப்படின்னு இடம் சார்ந்த எண்ணங்களும், அங்கு வாழ்ந்த மனிதர்கள் பத்தியும் யோசிக்க வச்சுச்சு. ஒரு ஐயர் கூப்பிட்டு தங்க கோபுர தரிசனம் செய்ய வச்சு, அதே மண்டபத்துல தகடு பதிச்சிருந்த இடத்துல கால வச்சு அங்க இருந்து வாசுதேவன் முகம் னு சொல்லி கோபுரத்துல இருந்த பெருமாள தரிசிக்க வைத்தார். அதற்காக சன்மானமும் வாங்கிக்கிட்டார். அது வேற விஷயம்.

இந்த பதிவும் நீளமா போனதால தாயார தரிசிச்ச கதை அடுத்த போஸ்ட் ல.

Thursday, March 17, 2011

நான் திருச்சி போனேனே... பார்ட் 1

எல்லோரும் வியப்புடன் ரசிக்கும் விஷயங்கள் மூன்று
1 . வானம்
2 . கடல்
3 . ரயில்

    மூன்றாவதை ரசித்து அனுபவிக்கும் வாய்ப்பு நேற்று கிடைத்தது. பொதுவாக நான் ஒரு Home Bird. வீட்டை விட்டு வெளியே போறதுனா நரக வேதனை. ஆனா நேற்று  அம்மாவின் நெடுநாளைய விருப்பத்தை ஈடேற்ற அம்மாவும், நானும் ஸ்ரீரங்கம் போனோம். பொதுவா நான் பெருமாள் கோவிலுக்கு போகும்போதெல்லாம் எனக்கு தேவையான சவுகரியங்களை அவரே பார்த்துப்பார். எங்க ரெண்டு பேருக்குள்ள அப்படி ஒரு understanding. இந்த முறை எப்படி இருக்கும்னு காத்துகிட்டு இருந்தேன். 

ரயிலில் ladies compartment தனியாக இருக்கும் என்பதே ஒரு வருடத்திற்கு முந்தைய என் முதல் திருப்பதி பயணத்தின் போது தான் அறிந்துகொண்டேன். அதற்கு அடுத்த பயணமாக இது அமைந்ததால் விழி விரிய ரயிலை பார்த்துக்கொண்டே ladies compartment சென்றால் செம கூட்டம். அம்மா, 'வா வேற கம்பார்ட்மென்ட் போலாம்' என்று இறங்கி விட்டார். நான் அம்மாவை சமாதான படுத்த இறங்கி ரெண்டு நிமிஷம் கூட ஆகல, உள்ளே இருந்த ஒரு சின்ன பையன் கதவை தாழ் போட்டுட்டான். வெளில வேற announcement . ட்ரெயின் கிளம்ப போகுதுன்னு. அவன திறக்க சொன்னா, அவனால மறுபடி திறக்க முடியாதபடி டைட்டா இருக்கு. வேறு வழியின்றி ஜெனரல்ல வேற கம்பார்ட்மென்ட்ல நுழைஞ்சா, எனக்கு முன்னாடி போன என் அம்மா சீட் புடிச்சு வைச்சிருக்காங்க. 'எப்படிமா' ன்னு கேட்டா, 'அதான் பாரேன்'ன்னு அம்மாவும் ஆச்சரியமா சிரிச்சாங்க. பெருமாளுக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு, அங்க இருந்த ஆளுங்க, ரயில் பயணம், ஒவ்வொரு ஸ்டேஷன்ல மக்கள், எல்லாத்தையும் வழக்கம் போல கவனிக்க ஆரம்பிச்சுட்டேன். அதென்னமோ மக்களை கவனிக்கறது எனக்கு ரொம்ப புடிச்ச விஷயமா இருக்கு. அழகு, நிறம், நாகரிகத்தையும் தாண்டி ஒவ்வொரு முகத்திலும் அவர்கள் குணம் இருப்பதாக தோன்றும். வீட்லயே உக்காந்துகிட்டு அதிகமா படிக்கறதால வர வியாதின்னு நினைக்கறேன். (இது பரவாயில்ல. ஒரு காலத்துல, சுவர் விரிசல், மேகம் இதெல்லாம் பார்த்துகூட அது எந்த எழுத்து மாதிரி இருக்குன்னு உருவகப்படுத்த முயன்ற கூத்தெல்லாம் பண்ணியிருக்கேன்...) 

ரயில் திருச்சி கோட்டை ஸ்டாப்பிங் வந்ததும் இறங்கி, அங்கிருந்து பஸ் பிடிச்சு உறையூர் வெக்காளி அம்மன் கோவிலுக்கு முதலில் போனோம். போர்ட் போட்டிருந்த வழியில் போனால், பெருமாள் கோவில் தான் முதலில் வந்தது. அங்கிருந்த செருப்பு பாதுகாவலர், 'செருப்ப இங்க விட்டுட்டு போங்கம்மா' என்று கூற, என்ன ஏதென்று கேட்காமல் அம்மாவும் விட போனார். நான் அவசர அவசரமாக அம்மாவை பிடித்து நிறுத்தி, 'ஏங்க, வெக்காளி அம்மன் கோவிலுக்கு போகணுங்க' என்று சொல்ல அவர் 'right left right left' என்று கூறினார். நிறைய பேருக்கு சொல்லி இருப்பார் போல. அவ்வாறே செல்ல, கோவில் வந்தது. 

எவ்வளவு புகழ் பெற்ற கோவில்! அழகாக, நீட்டா, சிம்பிளா இருந்தது. அம்மன் அவ்வளவு அழகு... இதுவரை மற்ற கோவில்களில் இல்லாத அளவு லைட் செட்டிங் பிரமாதமாக இருந்தது. முழு உருவமும் பளிச்சென்று தெரிந்தது.  lighting  எப்படி செட் பண்ணியிருப்பார்கள் என்று யோசித்து பார்த்தும் பிடிபடவில்லை. அப்பறம் பிரகாரத்தை சுற்றும்போது தான் தெரிந்தது, அது நேரடி சூரிய ஒளி. அம்மனுக்கு மேலே வைக்கோல் போன்ற ஏதோ ஒன்றை வைத்து கூரைபோலும் அமைத்திருந்தார்களே தவிர, அம்மன் வெட்டவெளியில் அமர்ந்திருந்தார். அம்மாவிடம் கேட்டபோது , 'சுற்றிலும் அடைத்திருந்ததால் அம்மனுக்கு அம்மை வந்ததாகவும், அவர் காற்றாட இருக்கவே விரும்புவதாகவும், அதனால் இந்த அமைப்பில் கோவில் கட்டினார்கள் என்றும்' சொன்னார்கள். இது குறித்த விரிவான கதை இருந்தால் நீங்களும் தெரியப்படுத்தலாம். திருப்தியாக கும்பிட்டு வெளியே வந்தோம். 

திரும்பி சத்திரம் பஸ் ஸ்டான்ட் போக வேண்டி இருந்ததால் வந்த வழியே 'right left right left' போட்டு வந்தோம். வரும் வழியில்  சிறுவன் என்றும் ஆள் என்றும் கூற இயலாத ஒரு பதின்ம வயது பையன் அவ்வளவு பப்ளிக்காக தன் டிரவுசரையோ பேன்ட்டையோ கழற்றி விட்டு காலை கடன் கழிக்க உட்கார போகும் நிலையில் பார்த்தேன். அவனை நிர்வாணமாக நான் பார்க்காவிட்டாலும் அவன் இடுப்புக்கு கீழ் ஆடை அணிந்திருக்க வாய்ப்பில்லை. சட்டென்று என் மனம் துணுக்குற்றது.

         கங்கை கரையில் ஒரு சண்டாளன் போலும் தோற்றமுள்ளவன் அமர்ந்து அங்கு வருவோர் போவோரிடம் தன்னை கங்கையில் குளிக்க வைக்குமாறு தினமும் வேண்டுவானாம். அவனை தொட்டால் பாவம் ஒட்டிக்கொள்ளும் என்று மற்றவர்கள் கூறுவதால், யாரும் அவனுக்கு உதவி செய்யவில்லையாம். ஒருநாள் ஒருவர் மட்டும் (பேர் மறந்துடுச்சு) மற்றவர்களின் எச்சரிக்கையை புறம்தள்ளி அவனை தன் கைகளாலேயே தூக்கிச்சென்று குளிக்க வைத்தாராம். அப்போது அந்த சண்டாளன்  "என்னை தொட்டு உங்களுக்கு பாவம் பிடித்து விட்டதே, உங்கள் பாவத்தை எப்படி போக்கிக்கொள்வீர்கள்?" என்றுகேட்டானாம். அதற்கு அவர் "பாவம் தீர்ப்பதற்க்காகதானே இந்த கங்கையே இங்கே இருக்கிறது. இந்த கங்கை நீரில் குளித்து போக்கிக்கொள்வேன், கங்கை பாவம் போக்கும் என்று அவர்கள் நம்பி இருந்தால் உன்னை எப்போதோ குளிக்க வைத்து உதவி செய்திருப்பார்கள். அவர்கள் கங்கையை நம்பாமல் கங்கையில் குளித்து என்ன பயன்?" என்றாராம். அப்போது அந்த சண்டாளன் தன் தேவ உருவத்தை காட்டி அவருக்கு அருள் பாலித்ததாக ஒரு கதை படித்துள்ளேன். அது போல அம்மனிடம் அவ்வளவு அருளை வாங்கிக்கொண்டு வந்ததாக நம்பும் நான் அதில் கொஞ்சமேனும் இந்த பையனுக்கு கொடுப்பதில் என்ன  தவறு என்று வர வரவே அந்த பையனுக்காக வேண்டிக்கொண்டு வந்தேன். 
 
ஸ்ரீ ரங்க பயணம் என் அடுத்த பதிவில். 

Thursday, March 3, 2011

கலைமகள் கல்வி நிலையத்தில் பிரித்தாளும் கொள்கை

                          நான் பள்ளி படிப்பை முடித்தது ஈரோட்டில் உள்ள கலைமகள் கல்வி நிலையத்தில். மேல்நிலையில் நான் ஒரு commerce student. நம்ம கிளாஸ் டீச்சர் நம்மள போலவே செம லயன் லேடி. எங்க குரூப் மட்டுமில்லாம maths group மற்றும் science group மாணவிகளுக்கும் ஏன் மற்ற டீச்சர்களுக்கும் கூட அவர் ஒரு சிம்ம சொப்பனம். வளவளனு கிளாஸ் எடுக்காம நறுக்கு தெறித்தார் போல அவர் வகுப்புகள் இருக்கும். மற்ற வகுப்புகளில் ஆட்டம் போடுவதை போல இவர் வகுப்பில் ம்ஹும்.... மூச்! 

                இவருக்கு உடலில் தீக்காயங்கள் இருக்கும். (ஏதோ பர்சனல் காரணங்களால் தானே வைத்துக்கொண்டதாக கூறுவார்கள்.) அதனால் தானோ என்னவோ இவருக்கு அழகான, சிவப்பான மற்றும் பணக்கார தோற்றமுள்ள பெண்களை ரொம்ப பிடிக்கும். Students எல்லாரையும் வாங்க போங்க என்றுதான் கூப்பிடுவார். திட்டுவதானாலும் கூட... இவரிடம் நான் வாங்கிய 200/200 வணிகவியல் பரீட்சை பேப்பர் இன்னும் என் பொக்கிஷம். 

                   +2 Farewell அன்று இவர் வகுப்பின்போது, படிக்க சொல்லிவிட்டு இவர் staff room சென்றுவிட, இங்கே நாங்க எல்லாம் கேமேராவோடு ஆட்டம் போட்டுக்கொண்டிருக்க, திடீரென அவர் திரும்பி வந்து விட, எதேச்சையாக கவனித்த நான் உள்ளே போய் 'மிஸ் வராங்க மிஸ் வராங்க' என எச்சரிக்க, புத்தகம் பறக்க, கேமெரா தெறிக்க எல்லோரும் அவரவர் இடத்தில் உட்கார்ந்துகொள்ள, உள்ளே வந்த மிஸ் என்னை பிடிபிடியென பிடித்துவிட்டு செல்ல, அவர் போன பின்பு மொத்த வகுப்பும் என்னோடு சேர்ந்து சிரித்த அனுபவம் இன்னும் பசுமையாக.... ஒரு வேளை டைம் மெஷின் கிடைத்து அதை உபயோகிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் செல்ல விரும்புவது என் +2 வாழ்க்கைக்கே. 

                         ரொம்ப நாள் கழிந்து விட்டதால், சமீபத்தில் சந்தித்த அந்த பள்ளியின் மாணவிகளிடம், நான் படித்த போது இருந்த ஆசிரியைகளை பற்றி விசாரித்தேன். அப்போது அந்த மிஸ் வி.ஆர்.எஸ் வாங்கி சென்று விட்டதாக அறிந்து அதிர்ச்சியுற்றேன். என்ன காரணம் என்று கேட்டால் இன்னும் அதிர்ச்சி. சீனியாரிட்டியின்படி இந்த மிஸ் தான் ஹெச்.எம் ஆகி இருந்திருக்க வேண்டுமாம். ஆனால் இவர் தேர்ட் குரூப் எடுக்கும் ஆசிரியை என்பதால் முதல் குரூப் எடுக்கும் இன்னொரு ஆசிரியைக்கு அந்த போஸ்டை கொடுத்து விட்டார்களாம். முட்டாள்தனமாக தோன்றியது. 

                       நான் தேர்ட் குரூப் படித்த ஸ்டுடென்ட்  என்பதால் அல்ல. பொதுவாகவே கேட்கிறேன், எல்லா படிப்பும் ஏதேனும் ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்கிறது அல்லவா? அப்படி இருக்கையில், இந்த படிப்பு உயர்வு இந்த படிப்பு தாழ்வு என்று எப்படி இவர்களாக முடிவெடுக்கலாம்? முதல் க்ரூபில் படித்த ஒருவர் எஞ்சினியராக முப்பதாயிரம் சம்பளம் வாங்கினால், தேர்ட் குரூப் படித்தஒருவர் ஆடிட்டராக, லீகல் அட்வைசராக அறுபதாயிரம் எழுபதாயிரம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மூன்று பேருமே எனக்கு நண்பர்கள் என்பதால் இந்த விஷயத்தை அந்த பெண்களிடமும் சொன்னேன். அவர்களும் எங்கள் பள்ளியின் முட்டாள்தனமான முடிவில் அதிருப்தியை தெரிவித்தார்கள்.

                         இன்னும் ஒரு கொடுமை. எங்கள் பள்ளியில் Prayer Hall என்ற இடத்தில் அனைவரும் உட்கார்ந்து படிக்கலாம். அங்கே இப்போது பாகம் பிரித்து விட்டார்களாம். இந்த தூரம் வரை maths and science குருப்களுக்கு. மீதி தூரம் மற்றவர்களுக்கு என பிரிக்கப்பட்டுள்ளதாம். கேனத்தனமாக தோன்றியது. இதற்கும் சண்டை வேறாம். I , II குருப் பெண்கள் படிக்கும்போது அங்கே தேர்ட் குரூப் பெண்கள் படிக்கக்கூடாதாம். வகுப்பின் உள்ளேயே படித்துக்கொள்ள வேண்டுமாம். படிப்பவர்கள் எங்கே அமர்ந்தாலும் படிக்க மாட்டார்களா? இதே கல்வி நிறுவனம்  முதல் மற்றும் இரண்டாம் குரூப்களுக்கு கொடுக்கும் முக்கியதுவத்தை மற்றவர்களுக்கும் கொடுத்திருந்தால் அவர்களும் ஸ்டேட் டாப்பர்களாக வந்திருப்பார்கள் அல்லவா? இல்ல, எங்களுக்கு first and second group தான் முக்கியம் என்றால் மற்ற பிரிவுகளை இழுத்து மூடிவிட்டு போக வேண்டியது தானே? கிட்டத்தட்ட 65 வருட பாரம்பரியம் உள்ள  ஒரு முன்னணி கல்வி நிறுவனத்தில் இப்படி தீண்டாமை போன்ற ஒரு நிலை உள்ளது என்றால் கல்வி அதிகாரிகள் எல்லாம் எந்த புல்லை பிடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
 

                  எச்சரிக்கை! இவர்கள் செய்வது ஒரு மாபெரும் பிழை. வருங்கால தலைமுறையினர் இடையே மிகப்பெரிய இடைவெளியை விதைக்கிறார்கள். முதல் பிரிவில் கணிதம் எடுத்த பெண்ணும், மூன்றாம் பிரிவில் பிசினஸ் கணிதம் எடுத்த பெண்ணும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள், ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள் எனும்போது எங்கே வந்தது ஏற்றதாழ்வு? அடிப்படையில் மாணவிகளுக்குள்ளும், கல்லூரிகளுக்குள்ளும், வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களுக்குள்ளும் இல்லாத வேறுபாடு நடுவில் உள்ள பள்ளியில் மட்டும் இருப்பது கேவலமாக உள்ளது.

                            என் பாட்ச்சில் முதல் பிரிவு , இரண்டாம் பிரிவு எடுத்து படித்த பெண்களில் வேலைக்கு செல்கிறார்கள் என்று ஒரு பெண்ணை கூட அறியவில்லை. பெரும்பாலும் திருமணமாகி வீட்டில் இருக்கிறார்கள். இது சத்தியம். அதே போல, என் வகுப்பை சேர்ந்த பெண்களில் பாதிக்கு பாதி நல்ல ஆசிரிய பணியிலோ, வக்கீலாகவோ, கணவனுக்கு தொழில் உதவி செய்து கொண்டோ, சிறிய அளவில் தொழில் செய்து கொண்டோ இருக்கிறார்கள். நான் முதல் அல்லது இரண்டாம் பிரிவில் படித்த யாரையும் குறை சொல்லவில்லை. அது அவர்கள் விருப்பம். வசதியை பொருத்தது. ஆனால், ஒரு கல்வி நிறுவனம் முட்டாள்தனமாக குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களால் தான் நாடு முன்னேறுகிறது  அப்டிங்கற ரேஞ்சுக்கு இந்த பிரித்தாளும் வேலையை செய்வது நிச்சயம் கண்டிக்கதக்கதல்லவா?